Thursday, May 31, 2018


திருஞானசம்பந்தர் தேவாரம்... தமிழ் தேனமுது!

திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்கள் பலவும் வழிபடுவதற்கும், பாடி மகிழ்வதற்கும் மட்டுமின்றி, தமிழ்ச்சொல்லணி இயலுக்கும் மூலமாகத் திகழ்கின்றன.

திருஞானசம்பந்தப்பெருமான் தமிழில் பல புதிய இலக்கிய வடிவங்களைத் தோற்றுவித்தார் இவற்றை இலக்கண நூலார் மிறைக் கவிகள் சித்திரக் கவிகள் விருந்து வனப்பு என்று பலவாறு அழைக்கின்றனர் திருஞானசம்பந்தர் இதனை விருந்தாய சொல்மாலை என்று தமது பதிகத்தில் குறித்துள்ளார். மொழிமாற்று, மாலைமாற்று... என இதில் பலவகை உண்டு.

மேலும் பாடுவதற்குக் கடினமான, ஞானம் இல்லாத கவிஞர்களால்  இயற்ற முடியாத பாடல்களான  "எழுகூற்றிருக்கை (தேர் போன்ற அமைப்பும்,எண்களைக் கூட்டி பின் குறைத்துப்  பாடுவது),  யாழ்முரி( வீணையில் இசைக்க முடியாதது) , திருத்தாளச்சதி ( பாடல் பாடுவது தாளம் போடுவது போன்றே இருப்பது) , திருவிருக்குறள் ( இரண்டிரண்டு வார்த்தைகளைக் கொண்டு நான்கு அடிகள் உள்ள பாடல்) ,  திருமுக்கால் (இரண்டாம் அடியில் முக்கால் வரிகள் பாடிப், பின் மூன்றாம் அடியில் அதே முக்கால் வரியை முழு வரியாகப் பாடுவது),  திருவியமகம் ( ஒவ்வொரு இரண்டு அடிகளின் கடைசியில் ஒரே வார்த்தையை, வேறு வேறு அர்த்தம் தருமாறு பாடுவது) ,  சக்கரமாற்று (ஒருபாடலின் இறுதியில் சொன்ன பெயரை அடுத்த பாடலின் ஆரம்பத்தில் வைத்துப் பாடுவது),  மாலைமாற்று (முன்னிருந்து பாடினாலும், பின்னிருந்து பாடினாலும் ஒரே வார்த்தை, ஒரே அர்த்தம் தருவது) ,  ஏகபாதம் (நான்கு அடிகள் உள்ள பாடலில் ஒரே வரியையே மீண்டும் மீண்டும் வைத்துப் பாடுவது, ஆனால் ஒவ்வொரு அடியும் வேறு வேறு பொருள் தருவது),  கோமூத்திரி (இரண்டடி செய்யுள்களால் அமைந்து, முதல்  செய்யுளின்  இரண்டாம் அடியை விட்டு அடுத்த செய்யுளின் முதல் அடியைக் கொண்டாலும் அல்லது முதல் செய்யுளின் இரண்டாம் அடியையும், அடுத்த செய்யுளின் முதல் அடியை விட்டு,  இரண்டாம் அடியைக்  கொண்டாலும் அது ஒரு தனிப் பாடலாக, 1ம் 3ம் ஒரு பாடல், 2ம் 4ம் ஒரு பாடல் என்ற முறையில்  அமைவது) 

திருஞானசம்பந்தரின் விருந்தாய சொல்மாலைகளையும் அவற்றின் சிறப்புகளையும் இங்கே காணலாம்
அதில் ஒரு வகை 'கோமூத்திரி அந்தாதி’!

1.  கோமூத்திரி

தண்டியலங்காரத்தில், சித்திரக்கவி வகைகளில் இதுவும் ஒன்று. ஒரு செய்யுளை இரண்டு வரிகளாக எழுதி, மேலும் கீழும் ஒரு எழுத்து விட்டு ஒரு எழுத்து எனச் சேர்த்து வாசித்தாலும், அதே செய்யுளே வரும். பசுவானது நடந்துகொண்டே கோமியம் கழிக்கும்போது, அந்த நீர் விழுந்த தாரையானது மேலும் கீழுமாக நெளிந்த வடிவமாகத் தோன்றுமல்லவா... எனவேதான், இதற்கு 'கோமூத்திரி அந்தாதி’ எனப் பெயர் உண்டானது. அதுவே இரண்டு மாடுகள் கழிப்பதாக இருந்தால் இரு எதிர் எதிர் வளைவுகள் கிடைக்கும். அவ்வமைப்பைச் செய்யுளில் அமைப்பது கோமூத்திரி என்னும் சித்திரகவியாகும். (கோ =பசுமாடு மூத்ரி = மூத்திரம்)

கீழுள்ள பாடலைக் கவனியுங்கள்

பருவ மாகவி தோகன மாலையே

பொருவி லாவுழை மேவன கானமே

மருவு மாசைவி டாகன  மாலையே

வெருவ லாயிழை பூவணி காலமே

இந்தப் பாடல், இரு வரிசையாக 'கோமூத்திரி’ வடிவில் எப்படி இருக்கிறது என்பதை படத்தில் பார்த்து மகிழலாம்.

(1)
முதல் அடி
http://www.tamilvu.org/courses/diploma/a021/a0214/images/a02146pr.jpg
இரண்டாம்அடி


(2)
முதல் அடி
http://www.tamilvu.org/courses/diploma/a021/a0214/images/a02145ma.jpg
இரண்டாம்அடி


(3)
முதல் அடி
http://www.tamilvu.org/courses/diploma/a021/a0214/images/a02146pm.jpg
இரண்டாம்
அடி
முதலடியையும், இரண்டாம் அடியையும் இவ்வாறு கோமூத்திரிச்
சித்திரமாக அமைத்துப் பாடுவது இவ்வகைச் சித்திரக்கவியாகும்.


இதுமட்டுமின்றி, சொல்லணி இயலில் சுவாரஸ்யம் கூட்டும் இன்னும் பல வகை பாடல்கள் உண்டு. வகைகளும் உதாரணப் பாடல்களும் இங்கே உங்களுக்காக...







2.  திருஎழுகூற்றிருக்கை எண் அலங்காரப் பாடல். சித்திரக் கவி.
இந்தப் பாடல் அமைப்பு திருஞானசம்பந்தரால் முதன் முதலாகப் பாடப்பட்டதாகும் இதனைத் தேர்ப் பந்தம் எனவும் அழைப்பர் இது இயற்றுவதற்குக் கடினமானதாகும் 47 அடிகளால் ஆன இதனைத்தினமும் பாராயணம் செய்து ஓதினால் திருஞானசம்பந்தர் அருளிய அனைத்தையும் ஓதிய பலனைத் தருவதாகும் திருஞானசம்பந்தரை அடியொற்றி அருணகிரிநாதர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முதலிய மிகச்சிலரே எழுகூற்றிருக்கையைப் பாடியுள்ளனர்.
ஒன்று, இரண்டு, ஒன்று, ஒன்று, இரண்டு, மூன்று, இரண்டு, ஒன்று... என ஒன்று முதல் ஏழு வரையிலும் படிப்படியாக ஒவ்வொன்று ஏற்றியும், இறக்கியும் ஏழு கூறுகளிலும் எண்கள் இருக்க இயற்றப்படும் செய்யுள், எழு கூற்றிருக்கை ஆகும்.

கூறுகளாக அறைகளைக் கீறும்போது...

முதற்கூற்றில் மூன்று அறைகளும்

இரண்டாம் கூற்றில் ஐந்து அறைகளும்

மூன்றாம் கூற்றில் ஏழு அறைகளும்

நான்காம் கூற்றில் ஒன்பது அறைகளும்

ஐந்தாம் கூற்றில் பதினோரு அறைகளும் கீறி, இவற்றை ரதபந்தமாக அமைப்பது வழக்கம்.



3.  யாழ்முரி

திருஞானசம்பந்தரிடம் திருநீலகண்ட யாழ்ப்பாணர் யாழில் அடங்காமல் இருக்கும்படியான இசைப்பாடலை அருளும்படிக் கேட்க அவர் பாடியதே யாழ்முரியாகும் இது தருமபுரத்தில் அருளியதாகும் இதையொட்டி இங்குள்ள சிவபெருமான் யாழ்முரிநாதர் என்று அழைக்கப்படுகின்றார்

4.  மொழிமாற்று

இந்தப் பாடல்களில் உள்ள சொற்களை இடம் மாற்றிக் கொண்டு கூட்டினால்தான் பொருள்தரும் மொழிகளை மாற்றி பொருள் காண்பதால் இது மொழி மாற்று எனப்பட்டது இதில் தமது பாடலை திருஞானசம்பந்தர் ஞானத்தமிழ் என்று குறித்துள்ளார்

காடு அது அணிகலம் கார் அரவம் பதி; கால் அதனில்

தோடு அது அணிகுவர் சுந்தரக்காதினில் தூச்சிலம்பர்;

வேடு அது அணிவர் விசயற்கு உருவம் வில்லும் கொடுப்பர்;

பீடு அது அணிமணி மாடப்பிரமபுரத்து அரரே.


5.  மாலைமாற்று

ஒரு பாடலை முதலிலிருந்து படித்தாலும் இறுதியிலிருந்து தலைகீழாகப் படித்தாலும் ஒரே மாதிரியாக இருப்பதே மாலைமாற்று ஆகும் . மாலைமாற்றுப் பதிகத்தில்,….

யாமாமா நீ யாமாமா யாழீ காமா காணாகா

காணா காமா காழீயா மாமாயாநீ மாமாயா


6.  வழிமொழி திருவிராகம்

இது ஒரு பாடலின் அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்துப் பின்வரும் சீர்களில் ஒன்றி வழியெதுகையாய் வருவது மேலும் சீர்காழிக்குரிய பன்னிரெண்டு பெயர்கள் வந்த வழியைக் கூறுவது என்பதும் ஆகும் இதனை திருஞானசம்பந்தர் வழிமொழிகள் என்று குறித்துள்ளார்

சீர்காழிக்கு பன்னிரண்டு பெயர்களும் வந்த  வழி- வரலாறு மொழியப்பெறும் பதிகம்... அதாவது வழிகளை மொழிந்த ராகமுடைய பதிகம், 'வழிமொழித் திருவிராகம்’ எனப் பெயர் பெற்றது.

முதற் பாடல், பிரமபுரத்துக்கு (சீர்காழி) பெயர் வந்த வழியைச் சொல்கிறது; 'சுரர், நரர், தரணி, முரண்...’ என 'ர’கரமாக வரும்.

இரண்டாவது பாடல், 'தாணு, வணி, ஆணு, பேணு...’ என 'ண’ கரமாகவும் வரும்.


7.  இருக்குக் குறள்

இருக்கு வேதத்தினைப் போன்று இருசீர் கொண்ட குறளடி நான்கினால் பாடப்பட்டதாதலின் இப்பெயர் பெற்றது ஆகும்.

உதாரணம் :

'அரனையுன்குவீர்...’,

'நீலமிடற்று ஆலவாயன்...’,

'வாசி தீரவே காசு நல்குவீர்...’

'சித்தந்தெளிவீர்காள்...’



8.  ஈரடிமேல்வைப்பு

ஈரடிச் செய்யுள்களின் மேலும் இரண்டு அடிகளை வைத்துப் பாடப்பட்டதால் இப்பெயர் பெற்றது முன் இரண்டடி ஒரு எதுகை சந்தமாகவும் அடுத்த இரண்டடிகள் வேறு எதுகை சந்தமாகவும் அமைவது ஆகும்
உதாரணம்:

'தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய்...’

(அடிகள் வெவ்வேறாக வரும்)

கொள்ளம்புதூர் பதிகத்தில் ஒன்றாய் வரும். 'கொட்டமே கமழும்’



9.  நாலடிமேல்வைப்பு

பாடலின் முதல் நான்கு அடிகள் ஓர் அமைப்பிலும், மேல் வைப்பாக வரும் அடிகள் வேறு அமைப்பிலும் வரும். நாலடிச் செய்யுள் மீது மீண்டும் இரண்டு அடிகள் வரும்படிப் பாடியது இதுவாகும்.

உதாரணம் :

இயலிசையெனும் - புகலிப் பதிகம்

வேதவேள்வியை - ஆலவாய்ப் பதிகம்

இடரிலும் தளரினும் - ஆவடுதுறைப் பதிகம்


10.     திருச்சக்கரமாற்று:
சக்கர வடிவமாக அடைத்துச் சுழன்று வருவது போல், சீர்காழியின் 12 பெயர்களுமே மாறி மாறிச் சுழன்று வருவது போல பாடப்பட்டிருக்கும். இது, ஒரு சக்கரத்தைப் போன்று சுழன்று சுழன்று வருவதால் 'சக்கரமாற்று’ எனப்பட்டது.

முதல் திருப்பாட்டில் இறுதியில் வரும் 'கழுமலம் என்றும்’ 2-ம் திருப்பாட்டில் முதலிலும்; 2-ம் பாட்டின் இறுதியில் உள்ள 'தோணிபுரம்’ 3-ம் பாட்டின் முதலிலும் வரும்படி தொடர்ந்து பாடப்பட்டிருக்கும். பன்னிரண்டாம் பாட்டின் இறுதி அடியில் உள்ள 'அயனூர்’ என்பது, பூமகனூர் எனும் திருப்பாட்டின் முதலிலும் வரும். இப்படி, பதிகத்திலுள்ள 12 திருப்பாடல்களும் சீர்காழிக்கு உரிய 12 திருப்பெயர்களால் முன்னும்பின்னுமுள்ள திருப்பாடல்களுடன் இணைந்து, ஒரு வட்டமாகச் செல்வதால் இப்பதிகம் சக்கரம் என்ற பெயர் பெற்றது. உதாரணம்: 'விளங்கிய சீர் பிரமனூர்...’ என்று தொடங்கும் காந்தாரப் பண்.


11.     ஏகபாதம்

ஒரு பாடலின் முதல் அடியிலுள்ள சொற்களே பின்வரும் மூன்று அடிகளிலும் வரிசை மாறாமல் வருவதே ஏகபாதம் எனப்படும்  சொற்கள் ஒன்றாக இருந்தாலும் அடிகள் தோறும் பொருள்கள் மாறிவரும் தன்மை உடையது ஆகும்

12.     ஈரடி: 

இரண்டு அடிகளில் அமையும் பாடல் உதாரணம்: 'வரமதே கொளா...’ - பழம் பஞ்சுரப் பண்.


13.     கூடற்சதுக்கம்

நான்கு தலங்களின் இறைவனை ஒன்றாகப் போற்றுவது மயேந்திரபள்ளி ஆரூர் கயிலை ஆனைக்கா ஆகிய நான்கு தலங்கள் இதில் போற்றப்பட்டுள்ளன ஆகும்

14.     பூட்டுவிற்பொருள் கோள்

இதில் பாடலின் இறுதி அடியை மேலடிகளில் பூட்டிப் பொருள் கொள்வதால் இப்பெயர் பெற்றது ஆகும்


இது போன்ற அரிய பாவகைகள் தேவாரத்தில் நிறைந்துள்ளன. உண்மையான தமிழ் ஆர்வலர்களுக்கு திருஞான சம்பந்தர் தேவாரம் ஒரு பொக்கிஷம். வைகளை அருளிய திருஞானசம்பந்தப் பெருமான் தமிழ் விரகர் என்றே போற்றப்படுகிறார்.